Showing posts with label 24.ஈமக்கிரியைகள். Show all posts
Showing posts with label 24.ஈமக்கிரியைகள். Show all posts

Thursday, June 30, 2011

ஈமக்கிரியைகள்


கருடன் முராரியை நோக்கி சர்வேசா! தாயைப் பெற்றவளும், அவளைப் பெற்றவளும், அவனைப் பெற்றவளும், தந்தையைப் பெற்றவனும், அவனைப் பெற்றவனும் உயிரோடு இருக்கும் பொது, தாயாவது தந்தையாவது இறந்துவிட்டால், அவர்களுக்குப் புத்திரன் எவ்வாறு பிண்டம் சேர்க்க வேண்டும்? என்பதை அடியேனுக்குக் கூற வேண்டும் என்று வேண்டினான். அதற்குப் பகவான் கூறலானார்.
           வைனதேயா!   தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும். பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான். சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சிலகருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.
                          கருடா!    ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.